“நீங்க நல்லவரா கெட்டவரா” என்ற ‘நாயகன்’ வசனத்துக்கு நச்சென்று பொருந்தும் நடிகராக ரசிகர்களிடம் ரீச்சாகி இருக்கிறார் சுப்புபஞ்சு. தயாரிப்பாளர் பஞ்சுஅருணாச்சலத்தின் மகன். நல்லவன், கெட்டவன், அப்பாவி, அடப்பாவி என பலதரப்பட்ட பாத்திரங்கள் இவரது அடையாளம். ‘அரண்மணை 2’ ஹிட்டுக்கு பிறகு சுப்புவின் கால்ஷீட் மீட்டரில் சூடுபறக்க, ஒரு கூல் ஈவினிங்கில் அவரை சந்தித்தோம்.
உங்க நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்?
“அப்பா பெரிய தயாரிப்பாளராக இருந்ததால் எங்களோட பி.ஏ.ஆர்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு வேலையில் அப்பாவுக்கு துணையாக நானும் இருந்தேன். ‘குருசிஷ்யன்’ படத்தில்தான் முதல்முறையாக தயாரிப்பு பணியில் இறங்கினேன். நிறைய படங்களை தயாரித்து வந்தாலும் நடிப்பு, ஹீரோங்கற ஆசையெல்லாம் வந்ததில்லை. டான்ஸில் ஆர்வம் இருந்துச்சு. என் அண்ணன் ஹீரோவா நடிச்ச ‘கலிகாலம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கேன். ‘விடுகதை’, ‘கவலைப்படாதே சகோதரா’ படங்களுக்கு மட்டும் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கேன்.
பிரதாப்போத்தன் சார் மலையாளத்தில் ‘டெய்சி’ படம் இயக்கியபோது ஒரு முக்கியமான ரோல் இருக்கு பண்றியான்னு கேட்டார். அப்பா சம்மதிச்சதால் அந்தப்படத்தில் நடிச்சேன். அதுதான் நடிப்பில் எனக்கு முதல் படம். அப்புறம் ;என் ஜீவன் பாடுது’ படத்தில் ஒரு கேரக்டர் பண்ணினேன். அதுக்கு மேல நடிக்கணும்னு தோணலை.
நாங்க ‘மாயக்கண்ணாடி’ படம் தயாரிச்சப்போ சமுத்திரகனி அவர் இயக்கி வந்த ‘அரசி’ சீரியலில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க கேட்டார்.வேண்டாம்னு மறுத்தும் ரெண்டு நாள் மட்டும் நடிச்சிட்டு போயிடுங்கன்னார். சரின்னு ஒத்துக்கிட்டு அதில் நல்லதம்பி கேரக்டரில் நடிச்சேன். ரெண்டு நாள் ஷூட்டிங் என்பது போய் என்னோட கேரக்டரை டெவலப் பண்ணி ராதிகா அக்காவுக்கே வில்லனா நிற்கிற அளவுக்கு கேரக்டர் ரீச்சாகிடுச்சு.
எங்கப்போனாலும் ஆடியன்ஸ் என்னை நல்லதம்பின்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யா அண்ணனா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதிலும் நல்ல பெயர் கிடைக்க, ‘கலகலப்பு’ படத்தில் காமெடி வில்லன், ‘நவீன சரஸ்வதி சபதத்தில்’ சிவன், ‘ஆண்மைத்தவறேல்’ படத்தில் வில்லன், ‘அரண்மனை 2’வில் நெகட்டிவ் ரோல்னு வேண்டாம்னு ஒதுக்கின நடிப்பு இப்போ உடும்புப் பிடியாய் பிடிச்சுகிச்சு. எனக்கும் அது பிடிச்சுப்போச்சு”
கேரக்டர் ரோல் என்றாலும் ஜோடியெல்லாம் கிடைக்குது. ஹீரோ ஆசை எட்டி பார்த்திருக்குமே?
“சத்தியமா இல்லை. ஆனால் இரண்டு படங்களில் ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தது. நல்லா போய்ட்டு இருப்பதை நானே கெடுத்துக்குவானேன் என்று மறுத்திட்டேன். கதையின் நாயகன்தான் லைன் மட்டும் கேளுங்க என்று வற்புறுத்தினாங்க. கதையை மட்டும் கேட்டுட்டு அவங்களை பத்திரமா அனுப்பி வச்சிட்டு நான் தப்பிச்சிட்டேன்”
நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்?
“ஜீவாவுடன் ‘ஜெமினிகணேசன்’, வெங்கட்பிரபு இயக்கும் ‘சென்னை 28’ பார்ட் டூ, ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ அப்புறம் ‘தொல்லைக்காட்சி’ உள்ளிட்ட படங்கள் போய்ட்டு இருக்கு”
என்ன மாதிரியான கேரக்டர் பண்ண ஆசை?
“வி.கே.ராமசாமி மாதிரி வயசான கேரக்டர், சத்யராஜ் சார் மாதிரி நெகட்டிவ் கேரக்டர், எல்லாத்தையும்விட எஸ்.வி.ரங்கராவ் மாதிரி எல்லா கேரக்டருக்கும் பொருந்தும் மாதிரியான நடிகனா என்னை வளர்த்துக்கணும்னு நினைக்கிறேன். “ ‘அரண்மனை’ ரிலீசுக்கு முன்னாடி சுந்தர்.சி, ’இந்தப்படம் ஹிட் ஆச்சுன்னா உங்களுக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட் கிடைக்கும்’ன்னார். எப்படி சொல்றீங்கன்னு கேட்டப்போ ‘இவன் நல்லவனா கெட்டவனா’ங்கற பல்ஸ் ஆடியன்ஸிடம் இருந்துட்டே இருக்கும். அதுவே நீங்க நடிக்கும் மற்ற படங்களிலும் மெயிண்டெயின் ஆகும். அது உங்க கேரியருக்கு ப்ளஸ்ஸா இருக்கும்’ன்னார். தாங்க்ஸ் சுந்தர் சார்”
உங்கள் தந்தை பஞ்சு அருணாச்சலம் பட தயாரிப்பில் ஆலமரமாக இருந்தவர். இப்போது பட தயாரிப்பை கைவிட்டதன் காரணம்?
“முதலாளித்துவம் என்பதிலிருந்து சினிமா தயாரிப்பு என்பது ஒரு கட்டத்தில் கார்ப்பரேட் செட்டப்புக்கு மாறிச்சு. சினிமாவில் எவ்வளவு சக்சஸ் கொடுத்தோம் என்பது முக்கியமில்லை. கரண்ட்ல சக்சஸ் கொடுப்பதுதான் முக்கியம். நாங்க தயாரிச்ச சில படங்கள் தோல்வி அடைந்தபோது ஒரு கட்டத்தில் தயாரிப்பதை நிறுத்த வேண்டியதா இருந்துச்சு. தலைமுறை மாற்றமும் காலமும்தான் அதுக்கு காரணம்.”
நீங்கள் தயாரிப்பாளரும் என்பதால் இந்தக் கேள்வி. இயக்குநர்களே தயாரிப்பாளர்களாகவும் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
“ஒருவிதத்தில் அவர்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் பாராட்டுக்குரியது. அதேசமயம் தயாரிப்பு, இயக்கம் என்ற இரட்டை சவாரி சிலருக்குதான் கைக்கொடுக்கும். கிரியேட்டராக இருக்கிறவர்கள் அதில்தான் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் இயக்குநராக ரொம்ப நாள் நீடிக்கலாம். தினமும் ஷூட்டிங் என்பது தினமும் கல்யாணம் பண்றது மாதிரிதான். தயாரிப்பு என்ற சுமையையும் சேர்த்து சுமக்க ஆரம்பித்தால் கிரியேட்டிவிட்டில் சறுக்கும் நிலை ஏற்படும் என்பது என் கருத்து”
கவியரசர் கண்ணதாசனுடன் இருந்த உங்கள் தந்தையும் சிறந்த பாடலாசிரியர். உங்களுக்கு அதில் ஆர்வம் இருந்ததில்லையா?
“எனக்கு கதை எழுதுவதென்றால் பிடிக்கும். சிறந்த கதை வசனகர்த்தா என்ற பெயரை வாங்கணும் என்ற ஆசை இருக்கு. இப்போது மூன்று கதைகள் எழுதியிருக்கேன். சமுத்திரகனி, வெங்கட்பிரபு, ராஜேஷ் ஆகியோர் என் கதைகளை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்தக்கட்டம் என்ன என்பதை ஆண்டவன் முடிவு செய்வான்” இவ்வாறு அவர் கூறினார்.