மரண வலி கொடியதிலும் கொடியது என்பார்கள்.
“வலி இல்லாமல் கொன்று விடு “என்று சிலரின் மனம் பிரார்த்திக்கும் ,நாத்திகராக இருந்தாலும்.!
இன்னும் சிலருக்கு “வாழவேண்டிய அவசியம் இருக்கே ,அதற்குள்ளாகவா சாக வேண்டும் என்கிற ஏக்கம் வரும்.
ஆனால் வன்புணர்வு கொள்கிற மனித மிருகங்களிடம் மாட்டிக்கொள்கிறவர்களுக்கு ஏற்படுகிற வலி இருக்கிறதே ,அது இனம் புரியாத வலி.
சாகவும் தோணும்..அவனை பலி கொடுக்க வேண்டும் என்கிற வன்மமும் ஏற்படும்.
டெய்ஸி இரானி என்கிற நடிகை இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்.
‘யார் பையன் ‘என்கிற தமிழ்ப்படத்தில் ஜெமினி கணேசன் -சாவித்திரியின் மகனாக ,குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
அவர் தனக்கு ஏற்பட்ட வன்புணர்வு கொடுமையைப் பற்றி கூறியது ஏனோ நினைவின் கதவுகளைத் திறந்தது. முன்பொரு தடவை பதிவு செய்ததை படித்துப்பார்த்தேன்.
” பிரபல பின்னணிப் பாடகருக்கு உறவுக்காரன், சினிமா உலகில் அவனுக்கு பெரிய செல்வாக்கு.
இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள்.அவன் மனது வைத்தால் என்னை பெரிய நடிகையாக்கி விடுவான் என்று என் அம்மா நினைத்தாள்.
அதனால் எனது கார்டியனாக பாதுகாவலாக ஷூட்டிங் நடந்த இடங்களுக்கு அவனை அனுப்புவாள்.அவனுக்குள் அப்படி ஒரு காமாந்தகன் ஒளிந்திருக்கிறான் என்பது யாருக்குத் தெரியும்?”
“சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதுதான் எனக்கு ‘அது ‘ நடந்தது” என நினைவுகளில் பின்னோக்கி செல்கிறார்.
“ஹோட்டல் அறைக்கு வந்ததும் எனது கார்டியன் இடுப்பு வாரால் என்னை அடித்தான். வெளியில் சொன்னால் கொன்னுடுவேன் என்று மிரட்டி என்னை கெடுத்துட்டான். வலியால் துடிக்கிறேன். வாய் விட்டு கத்த முடியல. உயிர்ப் பயம். சாகடிச்சிடுவானே! ,ஊருக்குப் போக முடியாதே!எத்தனை நாள் அந்த உயிர் வலியால் துடிச்சேன் தெரியுமா?”
பழைய நினைவுகள் என்றாலும் கண்களில் மிரட்சி! 70 ஆண்டுகள். பூட்டிக்கிடந்த இருட்டு அறை .சிலந்திக்கூடுகள், தூசுகள், மூச்சு முட்டச் செய்த மாசடைந்த காற்று .எல்லாம் வெளியேறின.
” 15– வயசு.’மேரே ஹுசூர்’ என்கிற படத் தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. மராத்தா மந்திர் பக்கமாக புரொட்யூசர் மல்லிகா சந்த கோக்கர் ஆபீஸ். அங்கே போவதற்காக அம்மா என்னை தயார்படுத்தி அனுப்பினாள்.அந்த காலத்து நடிகைகள் ‘ஸ்பான்ஜ்’ வைத்த ‘ப்ரா’ அணிவது வழக்கம்.எனக்கும் அதை அம்மா அணிவித்திருந்தாள். அந்த ஆள் சோபாவில் நானும் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்திலேயே அவனது கை தடவ ஆரம்பித்து விட்டது. பேசாமல் அதை கழற்றி அவனின் கையில் கொடுத்து விட்டு திரும்பி விட்டேன்.இதை எல்லாம் இப்போது சொல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை .உண்மையை சொல்லவேண்டும் என்று தோன்றியது.சொல்லி விட்டேன்” என்கிறார் டெய்சி இரானி.
மனதின் அழுத்தம் குறையுமே!.