“சிறு வயதில் கமல்ஹாசன் போஸ்டர்கள் மீது சாணி அடிச்சுருக்கேன்.நான் ரஜினி ரசிகன் “என்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியிருந்தார். அது ஊடகங்களில் சர்ச்சையாக்கப்பட்டது.கண்டனங்கள் குவிந்தன. அதன் பின்னர் அவர் வேறுவித விளக்கமெல்லாம் சொல்லி வந்தார்.
கமலும் ரஜினியும் எத்தகைய நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதை அவர்கள் இருவருமே பல மேடைகளில் சொல்லி வந்த நிலையில் லாரன்ஸின் சாணி அடிப்பு பேச்சு கமல் ரசிகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் லாரன்ஸ் ஆழ்வார்பேட்டை கமல்ஹாசன் அலுவலகம் சென்று பூங்கொத்து கொடுத்து விளக்கம் சொல்லியிருக்கிறார்.
இது தொடர்பாக லாரன்ஸ் சொல்லியிருப்பதாவது…
“அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.
எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.
அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.”
ராகவா லாரன்ஸ்