நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வழங்கவிருக்கிற விருதுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை .
“கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்துக்கு, இது மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்குத் தூணாகவும், இளைஞர்களுக்கு எழுச்சியாகவும், உயர்வுக்கு ஊன்றுகோலாகவும்,
வானுயர பெயரோங்கி வாழும் சூப்பர் ஸ்டார் .ரஜினிகாந்த் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் சிறப்பு விருது பெறப் போவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமைக் கொள்கிறது. விருது பெறப் போகும் ரஜினிக்கும் மத்திய அரசுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.” என்பதாக சங்கத் தலைவர் நாசர் அறிவித்திருக்கிறார்