இயக்குநர் : மொரட்டு சிங்கிள் ,இசை : தரன் குமார்,ஒளிப்பதிவு :தீபக் குமார் பாடி. தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
வருண் , சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு ,மாரிமுத்து ,வெங்கடேஷ் ஆர்.எஸ்.சிவாஜி,,பப்பி ( நாய்.)
***************
மாணவப் பருவத்தில் படிக்கக்கூடாத புத்தகம், பார்க்கக்கூடாத ‘போர்னோ ‘படம் இதையெல்லாம் படித்த ஒரு மாணவனின் காதல் கதைதான் பப்பி. இதுக்குப் போய் நாய் பெயரை வைத்திருக்கிறார்களே என்றால் அதுக்கும் ஒரு கதை சொல்கிறார்களே அங்கே நிக்கிறார் இயக்குனர் மொரட்டு சிங்கிள்!
நிறைமாத கர்ப்பமான அந்த பப்பி பேச்சு மூச்சில்லாமல் கிடக்க அதைத் தூக்கிகொண்டு கதாநாயகன் வருண் துடிப்பதும் கதறுவதும் கண்ணீர் விடுவதும் அதற்கு தரன் பின்னணி மியூசிக்கில் சோகத்தை வடிப்பதும் கடைசியாக அந்த நாய்க்குட்டி 7 குட்டிகளைப் போடுவதும் ,இதுக்குப் பின்னர் தானே கதாநாயகனுக்கு குழந்தையின் அருமை தெரியிது.!
குழந்தையின் அருமை வருணுக்கு எதுக்குத் தெரியனும் ?இப்படி கேப்பிங்க.
அதாவது செல்போனில் பலான படத்தைப் பார்த்து விட்டு கல்லூரியில் படிக்கிற வருண் சஸ்பெண்டில் இருக்கிறார். வீட்டு மாடியில் குடியிருந்த சம்யுக்த ஹெக்டேயும் அவரும் லவ்வர்ஸ். கிடைத்த தனிமையில் கில்மா. பலன் கர்ப்பம். அதை கலைப்பதற்கு நாய் படாத பாடு. கடைசியில் கலைக்கப்பட்டதா இல்லையா?இதுதானே கதை. அதனால்தான் குழந்தையின் அருமை வருணுக்கு பப்பி வழியாகத் தெரியிது.நாயே இவ்வளவு கஷ்டப்படும் போது நாயகி எவ்வளவு கஷ்டப்படனும்?
நாயகன் வருணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அந்த பருவத்துக்கே உரிய ஆசைகளை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். வீட்டுக்கும் பயம், காதலியை விடவும் மனசில்லை. கிடைத்த கேப்பில் கிடா வெட்டப்பார்க்கிற துடிப்பு எல்லாமே சூப்பர்.அந்த பருவத்தில் இருப்பவர்களுக்கு அந்த அவஸ்தை புரியும்.கர்ப்ப சோதனைக்காக அலைகிற அலைச்சல் இருக்கே இயல்பாக இருக்கிறது.
நாயகி சம்யுக்தா ஈடு கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
ஒன் லைனர்களில் தூக்கிச்சாப்பிட்டு விட்டுப் போகும் யோகிபாபுவுக்கு சோகமும் வருமா? வருது சார்.! எத்தனை நாளைக்குத்தான் பந்துக்கு காத்து அடிப்பது, பஞ்சர் ஓட்டுவது? நாமும் விளையாட மாட்டோமா என்கிற ஏக்கம் .சூப்பரப்பு.!படத்தின் பெரிய பிளஸ் யோகி.!
அடுத்து அந்த நாய் டாக்டர் ஆர்.எஸ்.சிவாஜி. சரியான ஆளைத்தான் போட்டிருக்கிறார்கள்.
தீபக் குமார் பாடியை பாராட்டாவிட்டால் நமக்கு பாவம் வந்துரும்யா! ஸ்டைலாக சொல்லலாம் சிறப்பு.வெகு சிறப்பு.!
சினிமா முரசத்தின் மார்க். 2 / 5