முதல் வார வசூலில் ரஜினி, அஜித், விஜய் படம் என்றால் 60%ம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படம் என்றால் 55%ம், மற்ற நடிகர்கள் படம் என்றால் 50%ம் விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் .
இந்த தொகை ஏ சென்டருக்கு மட்டுமே! பி,சி சென்டருக்கு இதில் இருந்து 5% அதிகமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நடிகர்களுக்கு அனைத்து சென்டருக்கு 50% வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாவது வார வசூலில் முதல் வாரம் தரும் சதவிகிதத்தில் இருந்து 5% குறைவாக விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும். எந்தெந்த நடிகர்களின் படங்களின் வசூலை எப்படி பங்கு பிரிப்பது என்பது பற்றி தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இது நடிகர்கள் ,படஅதிபர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் இன்று மாலை இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது,
என் இனிய தமிழ் மக்களே!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாட கூடிய ஒரு அபாயகரமான செயல்திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் இயங்குகிற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவீத வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவீத வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவீத வசூலையும், அந்த படத்தை விநியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம்.
அந்த அறிக்கையின் முதல் பத்தியில் மகிழ்ச்சியுடனும், வளர்ச்சியுடனும் வளர்ந்து வரும் வேளையில், இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த வரிகளைப் படிக்கும்போது திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும் வளர்ச்சி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நசுக்க அவர்கள் முடிவு எடுத்து விட்டார்களோ? என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த விகிதாச்சார முறை மட்டும் அமுலுக்கு வருமானால் ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் வர்க்கம், அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.
இப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்து விட்டு, அதற்குப் பின்னர் அந்த முடிவுகளைப் பற்றி தெரிய படுத்த வேண்டுகிறேன்.
தயாரிப்பாளர்கள் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறை யாக இருக்கும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.