“எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. என்றாலும் பேசியது சிறிது நேரம்தான் என்றாலும் மகேந்திரனின் அணுகுமுறை எனக்கு பிடித்துப் போனது.நல்ல மனிதர். முள்ளும் மலரும் படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் என்றார்கள் .ஆனால் அது சற்றே வில்லத்தனமானது என்பதால் மறுத்து விட்டேன். அந்த கேரக்டரில்தான் சரத்பாபு நடித்தார்.”என்ற சிவகுமார் தனக்கு மகேந்திரன் எழுதிய கடிதத்தை காட்டினார்.
இராமாயணம்,மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் மீது சிவகுமார் ஆற்றிய பேருரையைப் பற்றிய மகேந்திரனின் நீட்டோலை அது.!
” அதீத கற்பனை…… என்ன ஆச்சரியம்!
நம் வீட்டினுள் கம்பன் வருகிறான் வியாசர் வருகிறார்!
கம்ப ராமாயணம் மகாபாரதம் எனும் இரு மாபெரும் காப்பியங்களை அவற்றில் வரும் மகத்தான கதாபாத்திரங்களை அவர்களின் தனிப்பெரும் குணாதிசியங்களை இன்றைய பேச்சு தமிழில் இரண்டரை மணி நேரம் சொட்டு தண்ணீர் நாக்கில் படாமல் நின்ற நிலையிலேயே ஒரு நொடி கூட தடையில்லாமல் தமிழ் அமுதமே அருவியாய் பெருக்கெடுத்து வந்து நம்மை மெய்சிலிர்க்க செய்வதோடு நமது காவியங்களின் கதையை அதன் மகோன்னதத்தை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் தமது வாழ்க்கையை செம்மை படுத்திக் கொள்ளவும் செய்துவிட்டு நன்றி வணக்கம் என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்கிறார் சிவகுமார்!
நம் உணர்ச்சிகளின் உச்சம் தொட்டு கண்களில் நீர் ததும்ப தவித்து நிற்கிறோம் !
ஓர் அதீதமான கற்பனை அல்ல!
திருக்குறள் சத்தியமாக இது உண்மை நிகழ்வு!
கம்பன் ஆகவும் வியாசர் ஆகவும் உருவெடுத்து நம்மிடம் பேசுவது அதை வல்லமை கொண்ட மாமனிதர் சிவகுமார் என்ற பெயர் ஆச்சரியமே!
நிறைவான இதயத்தால் நம்மிடம் பேசுகிறார்!
அவரது நினைவாற்றல் நம்மை வியப்படையச் செய்கிறது
ஒரு துண்டு பேப்பரும் குறிப்பு இல்லை!
ராமாயணம் போலவே மகாபாரதமும் அவர் இதயத்தில் திரண்டு நின்று அடைமழை கொட்டுகிறது!
வரலாற்றுப்படி எந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு ஏதோ ஒன்றை அவரது கடைசி படம் என்பார்கள் அதன்பின் அவரது மூப்பு காரணமாக ஓய்வெடுக்கிறார் என்பார்கள் அல்லது அந்தக் கலைஞன் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்பார்கள் இதுதான் இயல்பு !
இயற்கை இப்படியாக என் வாழ்வும் இனிதே முடிந்தது என்று ஒரு கலைஞனாக சுயசரிதை எழுதுகிறவர்களும் உண்டு
ஆனால் அதிசய மனிதர் சிவகுமார் சில வருடங்களுக்கு முன்னால் தனது வண்ணமயமான சினிமா வாழ்வுக்கு அவராகவே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வியக்கும் படியான ஒரு புதிய அவதாரம் எடுக்கிறார்.!
பழம்பெரும் இதிகாசங்களை காப்பியங்களை கருத்தூன்றி படித்ததோடு இலக்கியவாதிகள் பலரோடும் தன் உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படுத்தி தன்னை கூர்மையாக்கி கொள்கிறார்.
அவரது இடைவெளியற்ற உடற்பயிற்சியும் யோகாவும் கவனம் சிதறா வாழ்க்கையும் அவரது உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்த்து அவரது நினைவாற்றலையும் வலுவடையச்செய்கிறது !
உயர்ந்த எண்ணங்களை கூர்தீட்டி இன்று மேடையில் நம்மை சிலிர்க்க வைக்கும்படி பேசும் ஆற்றல் மிக்க பேச்சாளராக உருவெடுத்து நிற்கிறார்!
எத்தனையோ இலக்கியவாதிகள் படிப்பாளிகள் ராமாயணம் மகாபாரத கதைகளை நாள்கணக்கில் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த இதிகாசங்களான விளக்கவுரைகளை பல பெரிய புத்தகங்களாக தந்திருக்கிறார்கள்! அப்படியெல்லாம் செய்தவர்கள் நம் நினைவில் இல்லை !
ஆனால் காவியங்களை சிவக்குமார் சொல்லும்போது மட்டும் மறக்க முடியாத மாயாஜாலம் ஆக இருக்கிறது!
மற்றவர்கள் நம் காதில் விழும்படி பேசினார்கள் !
இவரோ நம் இதயம் உணர பேசுகிறார்!
வாழ்க்கை ஒரு வானவில் என்ற தலைப்பில் ஈரோட்டில் அவர் நிகழ்த்திய உரையின் கால அளவு ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் !அதை கேட்ட போது இவ்வளவு தான் வாழ்க்கை இது தான் வாழ்க்கை என்று அவர் தன் உள்ளங்கையில் வைத்து காட்டியது போல் உணர்ந்தேன்!
சங்க இலக்கியங்கள் முதல் மகாகவி பாரதியின் படைப்புகள் வரை அனைத்தையும் படித்து உணர்ந்து உள்வாங்கி இருக்கிறார் !
தமிழ்ச் சினிமா படைப்பாளிகளின் தமிழ்ப்பற்றை சமூக அக்கறையை தனது உள்ளங்கையில் வைத்திருக்கிறார் சினிமாவில் தமிழ் உரைநடை என்பது பராசக்தி படத்தில் இருந்து இன்று வரை நம்மிடையே எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதையும் நாம் உணர்வதற்காக பழைய தமிழ் படங்களில் குறிப்பிடத்தக்க நீண்ட வசனங்களை தட்டு தடுமாறாமல் சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்
பிறகு அந்த வசனங்கள் என்ன ஆயின என்பதையும் மேடையில் விவரிக்கிறார் கவியரசு கண்ணதாசன் ,பட்டுக்கோட்டையார், போன்றோரின் அற்புத திரைப்படப் பாடல்களையும் அவற்றின் வாழ்வியல் தத்துவங்களையும் விளக்கி நம்மை பரவசப் படுத்துகிறார்.
பாரதியின் பாஞ்சாலியை உணர்ச்சிகரமாக பாடி அவர் விளக்கிய அழகைக் காண அந்த மகாகவி இன்று இல்லையே
தனது உயரிய சொற்பொழிவுகளில் வாழ்க்கையில் தான் செய்த தவறுகளையும் சிவக்குமார் வெளிப்படுத்துவது அவரின் புடம்போட்ட உள்ளத்தின் வெளிப்பாடு !
அவர் மகாபாரதக் கதையைச் சொல்லி முடிக்கும் போது ஒரு உண்மையை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கிறார் 100% நல்லவன் என்று எவருமில்லை அதேபோல் 100% நூறு சதவிகிதம் கெட்டவன் என்று எவருமில்லை மிக மிக நல்லவன் இடத்தில் 75 சதவிகிதம் நற்குணங்களும் 25 சதவிகிதம் கெட்ட விஷயங்களும் இருக்கும் முழுக்க கெட்டவன் என்று நாம் சொல்பவனிடம் 75 சதவிகிதம் துர்குணங்கள் உடன் 25 சதவிகிதம் அற்புதமான குணங்களும் இருக்கும் என்பதை காவிய கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு விளக்குகிறார் !
ராமாயணத்தில் அப்படிப்பட்டவர்கள் ராமனும் ராவணனும் என்றால் இன்றைய தமது வாழ்வில் நமது வாழ்விலும் அத்தகைய மனிதர்களை நாம் அன்றாடம் சந்திக்கும் நம்மையே நாம் சுயபரிசோதனை செய்ய தூண்டும் .
வல்லமை கொண்ட சிவகுமாரின் சொற்பொழிவுகள் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகள் இப்போது அவரது கவனமெல்லாம் திருக்குறளில் இருக்கிறது அவரது நெடிய ஆராய்ச்சி முடிந்து அவரது திருக்குறள் உரை என்று கேட்போம் என்றால் காத்திருக்கிறேன் என்றென்றும் நம்மால் மறக்க முடியாத மாமனிதர் சிவகுமார்” என்கிறார் மகேந்திரன்.
ஆனால் திருக்குறள் உரையை கேட்காமலேயே அவர் கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விட்டார். என்றாலும் அந்த ஆவி காத்திருக்கும் வள்ளுவனின் உரை கேட்க.!