வணக்கம் .
தேர்தல் கால பரபரப்புகளுக்கு மத்தியில் “நீங்காத நினைவுகள்” தொடரை குறிப்பிட்ட நாளில் கொடுக்க இயலவில்லை.
தாமதம் என்பது எவ்வளவு கொடிய விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அறியாமல் இல்லை. இருந்தாலும் ஒற்றை மனிதனின் உழைப்பு என்பதால் பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தேர்தல் முடியும் வரை முன்னே பின்னே இருக்கும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
அன்புடன் ,
தேவிமணி .
****************************************************************************
‘புதுக்கவிதை ‘ சூப்பர் ஸ்டார் ரஜினி -ஜோதி இணைந்து நடித்திருந்த படம்.
கவிதாலயா தயாரிப்பு. எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். அந்த நேரத்தில் இவரது இயக்கத்தில்தான் ரஜினி தொடர்ச்சியாக நடிப்பதற்கு ஆர்வமாகவும் இருந்தார்,
நடிகை ஜோதி இந்தப் படம் வெளிவந்த நேரத்தில் சி ஐ டி காலனியில் ஒரு அபார்ட்மெண்டில் இருந்தார்.
அந்த காலத்தில் நடிகைகளுடன் அம்மாக்களும் கூடவே வருவார்கள். மகளுக்கு பதிலாக அம்மாவே பேட்டி கொடுப்பதும் உண்டு.
“சின்னப் பொண்ணு . எப்படி பேசுறதுன்னு தெரியாது சார்”என நெருக்கமாக அமர்ந்தபடியே சொல்வார்கள்.
போன் பண்ணிவிட்டு சென்றேன்.
மாலை நான்கு மணி.
அம்மாதான் கதவைத் திறந்தார். “வாங்க சார்…வாங்க”! குரலில் தெலுங்கு சாயல்.
“பாப்பா ட்ரஸ் பண்ணிட்டு இருக்கு.இப்ப வந்திரும்.”
போட்டோவுக்கு எப்படிப்பட்ட கலரில் புடவை வேண்டும் என்பதை அம்மாவிடம் புகைப்படக்காரர் சொன்னதும் “பாப்பா” என்றபடியே அறையை நோக்கி நடந்தார். சில நிமிடங்களில் அந்த அறையின் கதவு திறந்தது .புகைப்படக்காரருக்கு மட்டும் அழைப்பு..
“தம்பி. கொஞ்சம் இங்க வாங்க. பாப்பாவுக்கு என்ன மாதிரி ட்ரஸ் போடணும்? என்றதும் போட்டோக்கார தம்பி பாய்ந்து சென்று விட்டார்.
அன்றும் சரி,இன்றும் சரி புகைப்படம் எடுப்பவர்களுடன்தான் நடிகைகள் நெருக்கமாக பழகுவார்கள்.
“வெள்ளைப்புறா ஒன்னு ஏங்குது கையில் வராமலே” என்கிற பாட்டை முனங்கியபடியே வந்தார் ஜோதி.
பாரின் சென்ட் தூக்கல். போட்டோகிராபர் சொன்னபடியே கட் ஜாக்கெட். கட்டம் போட்டது. பட்டுப்புடவை.
டி.ராஜேந்தரின் ரயில் பயணங்களில் பார்த்ததற்கும் பேட்டியின் போது பார்த்தற்கும் நிறைய வித்தியாசம். அவரை கவர்ச்சிகரமாக நடிக்க வைக்கமுடியாது என்பதை அவரது முகமே சொல்லிவிடும்.
ஜோதி என்ன சொன்னார் என்பதை விட அவரின் அம்மா என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம். அந்தப்படத்தில் ரஜினி முழுமையான காதலராகவே மாறி இருந்தார் என சொல்லலாம்.
“தம்பி! நம்ம பாப்பாவை விட சாருக்கு ( ரஜினி ) வேற எவ பொருத்தமா இருக்க முடியும்னு சொல்லுங்க ? பாலசந்தர் சார் என் பொண்ணுதான் வேணும்னு கம்பல் பண்ணி எஸ்.பி.முத்துராமன் சார் நடிக்க வச்சார்” என்றார் அவரின் அம்மா.
அது எப்படியோ போகட்டும். தொடர்ந்து அவரால் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை. அம்மா,அக்கா கேரக்டர்களில் நடித்து வந்தார். அவரது மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. இளம் வயதிலேயே மார்பக புற்று நோய். இறந்து விட்டார்.
சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திரா.
ஏவி.எம்.படப்பிடிப்பு அரங்கில் செட் போட்டிருந்தார்கள். எஸ்.பி. முத்துராமன்தான் இயக்கம் .கவிதாலயாவின் தயாரிப்பு.
அரங்கில் அவ்வளவு அமைதி.!
ராகவேந்திரராக மேக் அப் போட்டிருந்தார். வழக்கமான ரஜினியை பார்க்க முடியவில்லை. துள்ளல் பேச்சு, ஆர்ப்பரிப்பான சிரிப்பு எதுவும் கிடையாது.
அவரே திரைக்கதை என்பதால் அந்த கேரக்டருக்குள் அமிழ்ந்து போய் இருந்தார். படம் முடியும் வரை விரதம். மாமிசம் எதுவும் தொடுவதில்லை. அங்கே வெட்டிப் பேச்சுக்கு இடமில்லை. அவரின் மவுனமே மற்றவர்களை விரட்டி விட்டது.
கும்பிட்டேன்.
அன்பான சிரிப்பு .அருகில் வந்து அமரும்படி ஜாடை.!
அருகில் சென்றேன்.இயக்குநர் எஸ்.பி.எம்.பக்கமாக உட்கார்ந்து விட்டேன்.
மெதுவான குரலில்…..
“புவனகிரியில் இருக்கிற படி சந்தில் நாலாவது நம்பர் வீட்டில்தான் மகான் பிறந்திருக்கிறார்.வெள்ளாறு வடக்குக் கரையில் சஞ்சீவராயர் கோவிலில் இருக்கிற அனுமாரை வணங்கி வந்திருக்கிறார்.” என்று அவர் சொன்னது அன்றுவரை யாரும் சொல்லாத புதிய தகவலாக இருந்தது.
அப்போது கையில் இருந்த ஒரு தாளை எஸ்.பி.எம். காட்டி “மினிஸ்டர் வி.சுவாமிநாதன் முயற்சியினால் அரசாங்கமே ராகவேந்திரரின் பிறந்த ஊரை அறிவித்திருக்கிற கவர்மென்ட் ஆர்டர் இதுதான்” என காட்டினார்.
ரஜினி மென்மையாக சிரித்தார்.
“சின்ன வயசில் ரொம்பவும் மோசமாக நடந்திருக்கிற நீங்க எப்படி சுவாமியின் பக்தராக மாறுனீங்க?”
“அதத்தானே கதையா வச்சிருக்கோம். அதை நானே சொல்லி இருக்கேன். அதனால கொஞ்சம் சஸ்பென்சா இருக்கட்டுமே? என்னோட ஆக்சன் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்ல! ரசிப்பாங்கன்னு நம்புறேன்” என்றார் சூப்பர் ஸ்டார்.
“குறும்புத்தனம்,சேட்டைலாம் அந்த வயசில வர்றதுதான் என்றாலும் பக்தி விஷயத்தில் நீங்க எப்படி?”
“அப்ப கிருஷ்ணர் மீது பக்தி. கிருஷ்ண ஜெயந்தியை ரொம்பவும் ஸ்பெஷலா கொண்டாடுவேன்.சின்ன வயசில் நான் ராமகிருஷ்ணா ஆச்ரமத்தில இருந்திருக்கேன் .ஒருத்தனின் வாழ்க்கையில் 8 வயசிலிருந்து 13 வயசுக்கு இடைப்பட்ட காலம் இருக்குல்ல அது அவனுக்கு முக்கியமான காலம். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவன் மனசில் என்ன உருவாகுதோ அது அப்படியே பெர்மனன்டா நிலைச்சு நின்னுடும். நான் எட்டு வயசிலிருந்து 13 வயசு வரை ராமகிருஷ்ணா ஆசிரமத்தில்தான் இருந்தேன்.
அங்கேர்ந்து வெளியில் வந்த பிறகுதான் என்னை கஷ்டங்களும் துரத்த ஆரம்பிச்சது. கூலி வேலை செஞ்சேன். கண்டக்டர் ஆக சேர்ந்தேன். அப்பத்தான் எனக்கு எல்லா பழக்கமும் ஏற்பட்டன. இப்ப தீய பழக்கங்களை சுத்தமா துடச்சி எறிஞ்சிட்டேன்” என்றார் சூப்பர் ஸ்டார்.
இதற்கு பிறகு அவர் சந்தித்த அனுபவங்கள் இன்னும் இரண்டு நாட்களில்!
–தேவிமணி.